உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு (09-04-2023)
வாசகங்கள்
முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 10:34,37-43
இரண்டாம் வாசகம் : கொலோசையர் 3:1-4
நற்செய்தி வாசகம் : யோவான் 20:1-9
திருப்பலி முன்னுரை
உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்னாள், பொன்னாள். ஆம்! இது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாள்.
பழைய பாஸ்காவில் செம்மறி ஆட்டின் இரத்தம் சிந்தப்படும். புதிய பாஸ்காவில் செம்மறியான நம் இறைவன் நமக்காக இரத்தம் சிந்தியதை நினைவு கூர்கிறோம். நமது பாவங்களுக்காக தன் ஒரே மகனையும் நமக்காக கையளித்தார் தந்தைக் கடவுள். இது அவர் நம்மீது வைத்துள்ள அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகிறது.
இயேசுவின் வாழ்வு மீட்பை சார்ந்தே அமைகிறது. அங்ஙனமே அவரது குரலும் ஒலிக்கின்றது. மீட்பு வரலாற்றின் பல அத்தியாயங்களை நமக்காக வாழ்ந்தார் நம் இறைவன். அவரது வாழ்வு என்றும் பிறரை வாழ வைப்பதிலே தான் அடங்கி இருக்கிறது.
அன்றும் இன்றும் என்றும் மக்கள் மீட்புக்காக குரல் கொடுக்கும் நம் மீட்பரின் உயிர்ப்பு நம் வாழ்வை மாற்றியமைக்கும். அவர் நமக்களித்த இம்மீட்பை நாமும் பிறருக்கு முழுமனதுடன் வழங்க முன்வருதல் வேண்டும். ஏனெனில் இறைமீட்பு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.
ஒன்றே செய்வோம், நன்றே செய்வோம், அதுவும் இன்றே செய்வோம்! பிறரை நல்வழிப்படுத்த, பிறருக்கு உதவிக்கரம் நீட்ட, என்றென்றும் உண்மையுடன் உறவுகளைப் பேண, பிறர் மீட்படைய நாமும் காரணமாக வழிபாட்டில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவருக்கு சான்று பகருங்கள் ஏனெனில் அவர் நல்லவர். தூய ஆவியின் வல்லமை கிறிஸ்து இயேசுவின் மேல் இருந்ததால் அவர் சென்ற இடங்களில் எல்லாம் நன்மையை செய்தார். என்றுமுள ஆண்டவர் இயேசுவே வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராக கடவுளால் குறிக்கப்பட்டவர். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் பாவமன்னிப்பு பெறுவது உறுதி. இதற்கு சான்றே அவரது சீடர்கள் என்பதை உரைக்கும் திருத்தூதர் பணிகள் நூலின் வார்த்தைகளுக்கு உள்ளங்களைத் திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் கிறிஸ்து இயேசுவுடன் உயிர் பெற்றுள்ளோம் ஆதலால் விண்ணுலக வாழ்வைக் குறித்து எண்ண வேண்டும் என்கிறார் திருத்தூதர் பவுல். இவ்வுலக வாழ்வைப் பற்றி எண்ணாமல் கிறிஸ்து இயேசுவுடன் இணைந்த விண்ணக வாழ்வைக் குறித்த எண்ணம் தேவை. ஏனென்றால் கிறிஸ்துவே நமக்கு வாழ்வு தருபவர். அவரோடு மாட்சி பொருந்தியவராய் தோன்ற வாசகத்தை வாழ்வாக்குவோம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- அன்பின் இறைவா! அச்சம் தவிர்த்து நாங்கள் வாழவும், நேர்மை துணிச்சலை கற்றுக் கொடுக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்து எச்சூழலிலும் நேர்மை தவராமல் துணிச்சலுடன் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறை விருப்பம் அனைத்தையும் நல்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் எங்களை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்து, இறைநம்பிக்கையில் வாழும் போது அவநம்பிக்கையில் இருந்து விடுபடலாம் என்பதை நாங்கள் உணர்ந்து இறைவனுக்கு எம்மை அர்ப்பணித்து வாழும் துணிவு எம் வாழ்வில் ஏற்பட அருள்தர உம்மை மன்றாடுகின்றோம்.
- வாழும் போதே இறக்கும் இழி நிலை தவிர்த்து நாங்கள் வாழவும், மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டுமெனில் வெறுப்பை விலக்கி காலத்தின் அருமையை உணர்ந்து நிறைகளை நோக்கி பிறர் துயர் உணர்ந்து வாழ முன்வர உமது ஆவியை பொழிந்து எம்மை வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நேர்மையற்ற மனிதர்கள் பிறர் மீது எறிய கற்களையும் பிறரை அவதூறு செய்ய சொற்களையும் சுமந்து கொண்டு செல்கின்றனர். பிறர் குற்றம் கண்டு தண்டிக்க வந்தோரை தன் குற்றம் உணர்ந்து மனந்திருந்தி செல்ல வைத்த இயேசுவின் பாதையில் எம் குற்றம் உணர்ந்து நேர்மையில் வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- மனிதர்கள் பிறரை கைவிட்டாலும் இறைவன் நம்மை என்றும் கைவிடுவதில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறார். மனித வழிய பிபின்பற்றி கடவுளை நாம் புறக்கணித்தாலும் நம் மீது அன்பு கொண்ட இறைவன் நம்மை விட்டு விலகுவதும் இல்லை நம்மை கைவிடுவதும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு இறைவனைப் பற்றிப் பிடித்து வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.



Amen
பதிலளிநீக்கு