பாஸ்கா திருவிழிப்பு (08-04-2023)
பொது முன்னுரை
உயிர்ப்பும் உயிரும் நானே என்ற இறைவனின் உயிர்ப்பு பெருவிழா இன்று. உலகினை உருவாக்கி, தன் சாயலாக மனிதனைப் படைத்து உலகை மனித ஆளுகைக்கு உட்படுத்தினார் இறைவன். இத்தகு அருள் பெற்ற இவ்வுலகம் காலப்போக்கில் இறைவனின் அன்பை மறந்து பாவத்திற்கு அடிமை ஆனது.
மனித குலத்தை மீட்க கடவுள் பல முறைகளை கையாண்டார். இறுதியாக தன் ஒரே மகனையும் நமக்காக கையளித்தார் நம் இறைவன். இது அவர் நம்மேல் வைத்த அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக அவரது கருணை இதில் வெளிப்படுகிறது.
உலக இன்பங்களுக்கு ஆட்பட்டு இறைவனின் அன்பை விட்டு விலகிய தருணங்களை எண்ணி பார்ப்போம். நமக்காக தன்னை கையளுத்த இறையன்பின் வழியே பிறருக்காக நம்மை கையளிப்போம். உயிர்த்த ஆண்டவரின் அருள் நம்முடன் இருந்து வழிநடத்த வரம் வேண்டுவோம்.
பாஸ்கா மெழுகுதிரி முன்னுரை
ஆதியும் அந்தமும் ஆன இறைவனின் பாஸ்கா விழாவை நினைவு கூறும் மெழுகுதிரி. உலகில் கடவுள் உருவாக்கிய முதல் படைப்பு ஒளி தான். அனைத்திற்கும் துவக்கமும் செயலின் தொடக்கமும் ஆனது ஒளியே. உலகின் ஒளியாம் இறைவன் நம் வாழ்வில் ஒளியாகி, வழியாகி நம்மை வழிநடத்த வேண்டி, இறை அருள் வேண்டி பணிவோம். அருட்பணியாளர் மெழுகுதிரியில் ஒளியேற்றி, "கிறிஸ்துவின் ஒளி இதோ!" என்று கூறும் போது "இறைவனுக்கு நன்றி " என்று பதிலுரைப்போம். பாஸ்கா திரியிலிருந்து ஒளியை பகிரும் நாமும் பிறருக்கு ஒளியாக நம்மை தயாரிப்போம்.
முதல் வாசகம் முன்னுரை
முதல் வாசகம் : தொடக்க நூல் 1:1 - 2:2
கடவுள் மண்ணுலகையும் அதன் உயிர்கள் அனைத்தையும் படைத்த நிகழ்வை தொடக்க நூல் எடுத்து உரைக்கிறது. கடவுளின் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பான மனிதனை அவரின் சாயலில் உருவாக்குகிறார். தன் அனைத்து படைப்புகளுக்கும் ஆசி வழங்கி பலுகிப்பெருக பணிக்கிறார். அவரது சாயலைப் பெற்ற நாம் அவரின் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். இதனை உணர்ந்து உயிர்த்த ஆண்டவரின் கொடைகளைப் பெற்று நல்வாழ்வு வாழ வாசகத்தை வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இரண்டாம் வாசகம் : தொடக்க நூல் 22:1-18
கடவுள் ஆபிரகாமை சோதிக்கின்ற நிகழ்வை இவ்வாசகம் கூறுகிறது. ஆண்டவர் மீது கொண்ட அதீத பற்றினால் தனது ஒரே மகனையும் அவருக்கு கையளிக்க துணிந்தார் ஆபிரகாம். நம்மிடம் இருக்கும் வளங்கள் அனைத்திற்கும் கடவுளே காரணம், ஆதலால் அவருக்காக அனைத்தையும் இழப்பதற்கு துணிதல் வேண்டும் என்பது விளக்கப்படுகிறது. கடவுளுக்காக இழக்க துணிந்தால் அனைவருக்கும் மேலாக கடவுள் நம்மை உயர்த்துவார். வாழ்வை இழக்கத் துணிவோர் அதைப் பெற்றுக் கொள்வார் என்பதை உணர்த்தும் இந்த வாசகத்தைக் கேட்டு வாழ்வாக்குவோம்.
மூன்றாம் வாசக முன்னுரை
மூன்றாம் வாசகம் : விடுதலைப் பயணம் 14:15 - 15:1
ஆண்டவர் இஸ்ரயேல் மக்கள் மீது கொண்ட அன்பினால் எகிப்தியர்களிடம் இருந்து அவர்களுக்கு விடுதலை அளித்த நிகழ்வு இவ்வாசகத்தில் அமைந்துள்ளது. எகிப்திய மக்களுக்கு எதிராக போரிட்டு மாண்புடன் வெற்றி பெற்றார் நம் இறைவன். இதனால் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கும் என்பது தெளிவாகிறது. எப்போதும் நம்மிடம் அன்புகூறும் நம் இறைவன் ஒருபோதும் நம்மை கைவிடுவது இல்லை. அவரது துணையுடன் பாவத்திலிருந்து வெற்றி பெற வாசகத்தை வாசிக்க கேட்போம்.
நான்காம் வாசகம் : எசாயா 54:5-14
ஐந்தாம் வாசகம் : எசாயா 55:1-11
ஆறாம் வாசகம் : பாரூக்கு 3:9-15, 32 - 4:4
ஏழாம் வாசகம் : எசேக்கியேல் 36:16-17, 18-28
திருமுகம்
உரோமையர் 6 : 3-11
திருமுழுக்கின் மூலம் கிறிஸ்து இயேசு உடன் இணைந்த நாம் அவரது இறப்பிலும் பங்கு பெறுதல் வேண்டும் என்கிறார் திருத்தூதர் பவுல். சிலுவையில் இறந்த இயேசுவோடு நம் பாவ வாழ்வும் இறந்துவிட்டது. புதுப்பிறப்பாக உயிர்த்த இறைவனுடன் நம் தூய வாழ்வும் உயிர்த்துள்ளது. பழைய பாவ வாழ்வை விட்டகன்று என்றும் உயிர்த்த இறைவனின் ஆசியுடன் தூய வாழ்வு வாழ இறைவார்த்தைக்கு உள்ளங்களைத் திறப்போம்.
நற்செய்தி வாசகம் : லூக்கா 24:1-12
திருமுழுக்கு திருவருட்சாதன முன்னுரை
இயேசுவின் இறைபணியின் துவக்கம் திருமுழுக்கின் வழியே தொடங்குகிறது. அனைவரையும் ஒன்றாக கூட்டி சேர்த்து நற்செய்தி பணியை புரிவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது திருமுழுக்கு தான். நற்செய்தி பணி மூலம் பலரை நல்வழிப்படுத்த துணையாக இருந்ததும் இவ்வருட்சாதனமே. இத்தகு சிறப்புமிக்க திருவருட்சாதன நிகழ்வில் பங்கு பெறுவோம்.
திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல்
திருமுழுக்கின் வழியே தூய ஆவியை பெற்று திருச்சபையில் இணைந்து வாழ அழைப்பது திருமுழுக்கு. நம் திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பிப்பதன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியில் உறுதி பெற்று நற்செய்தி பணியாற்ற நமக்கு ஆற்றலும் ஞானமும் கிடைக்க வரம் வேண்டுவோம். மூவொரு இறைவன் வழி இறைபணியாற்ற நம்மை தயாரிப்போம்.
பாஸ்கா தண்ணீர் புனிதப்படுத்துதல்
நீரின்றி அமையாது உலகு, உலகின் பெரும்பங்கை நிறைந்திருப்பது நீரே. நீராடினால் உடல் தூய்மையாகும் அவ்வண்ணமே புனித நீரினால் மனம் தூய்மை பெறும். இயேசு கிறிஸ்து நீரிலே தான் திருமுழுக்கு பெற்றார், அவரின் முதல் புதுமையும் தண்ணீரை சார்ந்தே அமைந்தது. இத்தகு சிறப்பு பெற்ற தண்ணீர் நம் வாழ்வின் அங்கமான தண்ணீரை புனிதப்படுத்தும் நிகழ்வில் முழு மனதுடன் பங்கேற்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- பிறரை மேன்மைப்படுத்தும் இறைவா! தான் மட்டுமே உலகில் நல்லவர் மேன்மையானவர் என்ற எண்ணம் பரவலாக நம்மிடையே காணப்படும் நோயாக மாறிவருகிறது. இதைக் களைய சக மனிதர்களையும் உயர்வாக எண்ண வேண்டும். தனிமனிதருக்கோ, சமூகத்திற்கோ, அமைப்புகளுக்கோ மேட்டிமை சிந்தனை ஆபத்தானது இதை நாங்கள் உணர்ந்து அனைவரையும் சமமாக கருதும் மனம் கொண்டு வாழ உமது அருளைப் பொழிந்து காக்க உம்மை மன்றாடுகின்றோம்.
- மனிதரின் தோற்றத்தையன்று அகத்தை ஆய்ந்தறியும் இறைவா! கடவுள் புறக்கணித்த வெளிப்புற அழகை வைத்து மனிதர்களை தவறாக எடைபோடும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை களைந்து கடவுள் விரும்புகிறதை நாங்களும் விரும்பி ஏற்கவும், நேர்மையான மனதுடன் அனைவரையும் பார்க்கும் குணம் எம்மில் வளர அருள்தர உம்மை மன்றாடுகின்றோம்.
- தேவையில் இருப்பவருக்கு உதவிக்கரம் நீட்டிய அன்பு இறைவா! உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய அன்பு, ஆறுதல், வழிகாட்டல் கிடைக்காததால் வாழ்வை தொலைத்தவர்கள் பலர். எம்மை சுற்றி வாழும் சமூகத்தில் தேவையில் வாடுவோரை அடையாளம் கண்டு இறையேசுவின் மனநிலையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நல்லுள்ளம் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உடன் பயணிப்போர் உள்ளம் நிறைவேற உதவிய இறைவா! என் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று யாசிக்கும் மனிதர்கள் தன்னுடன் வாழும் குடும்பத்தினரின் விருப்பத்தை அறிய கூட ஆர்வம் காட்டுவதில்லை. இந்த மனநிலையை எம்மிலிருந்து களைந்து உம்மைப் போல் பிறர் விருப்பம் என்னவென்று அறிந்து அவர்களின் விருப்பம் நிறைவேற எம்மை கையளிக்கும் நல்மனம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- பெருமை மறுத்து மக்கள்பணி செய்த இறைவா! இன்றைய உலகில் பலரும் பெருமையைத் தேடி அலைகின்றனர். உண்மையாக தன் பணியை பிறரன்போடு செய்தால் பெருமை நம்மைத் தேடி வரும் என்பதை பலரும் ஏற்பதில்லை. இந்நிலை மாறி எமது பணியை உண்மையோடும், நேர்மையோடும் சுயநலமின்றி செய்ய உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



Amen
பதிலளிநீக்கு